மண் சுமந்து குடும்பத்தை காப்பாற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.: ஊழல் அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக்கூடாது என்கிறார்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் புத்தாபுரத்தைச் சேர்ந்தவர் சுக்கா பகடாலு. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு பாத்தபட்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் இருந்தார். இதனால் இவருக்கு அப்போதைய காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திராகாந்தியுடனும் தொடர்பு ஏற்பட்டது.

இந்திராகாந்தி ஐதராபாத் வந்தபோதெல்லாம் சுக்கா பகடாலு நேரில் சந்தித்து கட்சியின் செயல்பாடுகள் பற்றி பேசுவார். எம்.எல்.ஏ. மற்றும் கட்சிப்பதவிகளில் பல ஆண்டுகாலம் இருந்தாலும் சுக்கா பகடாலு சொத்து-பணம் என்று எதையும் சம்பாதிக்கவில்லை. புத்தாபுரத்தில் சிறிய ஓலை குடிசையில்தான் குடும்பத்துடன் வசித்தார். கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் தீரத்துடன் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தாலும் தற்போது அதே குடிசையில்தான் வசிக்கிறார். அந்த குடிசை பழுதடைந்த நிலையில் உள்ளது. மழை பெய்தால் குடிசைக்குள் தண்ணீர் கொட்டுகிறது. குடிசைக்கு ஓலை வேயக்கூட அவரிடம் பணம் இல்லை. சில சமயம் சாப்பாட்டுக்கு பணம் இல்லாததால் பட்டினியில் வாடுகிறார்.

புத்தாபுரம் சுற்றுப் பகுதிகளில் வீடு கட்டும் வேலை நடந்தால் அங்கு சென்று மண், சிமெண்ட் கலவை போன்றவற்றை சுமக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 கூலி கிடைக்கிறது. வேலை இல்லாத நாட்களில் அக்கம் பக்கத்து வயல்களுக்கு சென்று களை எடுப்பது, நாற்று நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது... போன்ற வேலைகளைச் செய்கிறார்.

இனி சுக்கா பகடாலு சொல்கிறார்.

நான் இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரசில் பல்வேறு பதவிகளில் இருந்தேன். அப்போது அரசியலில் இருந்த எந்த தலைவர்களுக்கும் பணம்- சொத்து சம்பாதிக்கும் ஆசை இருந்ததில்லை. இதனால் எந்த துறையிலும் ஊழல் நடக்கவில்லை.

ஆனால் இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் ஊழல்வாதிகளாகத்தான் உள்ளனர். ஒரு தடவை எம்.எல்.ஏ.-எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள். ஆடம்பர பங்களா, சொகுசு கார், நகைகள்... என்று வாங்கி குவித்து விடுகிறார்கள்.

பதவிக்கு வருவதற்கு முன்பு சாதாரண நபராக இருக்கும் இவர்கள் பதவிக்கு வந்ததும் ஊழல் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இவை யெல்லாம் மக்களின் பணம். இதை கொள்ளை யடிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் விட்டு வைக்க கூடாது.

எம்.பி.-எம்.எல்.ஏ. பதவியில் இருந்தபோது மக்களை தேடி அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வந்து எட்டிப் பார்க்காத ஊழல் அரசியல் தலைவர்களுக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யார்? என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டும்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ஓட்டு கேட்பதற்கு மட்டும் வீடு வீடாக வரும் எம்.பி- எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு வந்ததும் அங்கு வர மாட்டார்கள். அதன் பிறகு தொகுதி மக்களை மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி விடுங்கள்.

இந்தியாவில் ஜனநாய கத்தை குழி தோண்டி புதைத்து வரும் ஊழல் தலைவர்கள் இருக்கும் வரை ஏழை-நடுத்தர மக்க ளின் வாழ்வில் விடிவு பிறக்காது.

எனது வீட்டை கூட ஒரு மந்திரி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது உடனடியாக சீரமைத்து தருகிறேன் என்று கூறி ஓட்டு கேட்டார். அவருக்கு ஓட்டு போட்டேன். ஆனால் ஜெயித்த பிறகு அவர் ஒரு தடவை கூட இந்த கிரா மத்திற்கு வரவும் இல்லை. என் குடிசை வீட்டை பழுது பார்க்கவும் இல்லை.

நாட்டில் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னைப் போன்ற கூலி தொழிலாளர்கள் வாழ்வில் விடியல் ஏற்படும் என்றார்.

கக்கா பகடாலு முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் புத்தா புரத்தில் எந்த விசேஷம் என்றாலும் அவருக்குதான் முதல் அழைப்பிதழ் கொடுக் கிறார்கள். என்னிடம் சொத்து இல்லாவிட்டாலும் மக்களிடம் நன்மதிப்பை சம்பாதித்துள்ளேன். இதை விட பெரிய சொத்து வேறு எதுவும் இல்லைதான் என்றார் கக்கா பகடாலு.

முதிய வயதிலும் தினமும் உழைத்து சாப்பிடும் முன்னாள் எம்.எல்.ஏ. சுக்கா பகடாலுவின் வாழ்க்கை இப்போதைய அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்.

0 comments: