தேவை இன்னொரு இன்னோவேசன்

கழிந்த முறை மிச்சிகனிலுள்ள இந்த குறும்நகரத்திற்கு வந்திருந்த போது திரும்புமிடமெல்லாம் நிறைய Desi-க்கள் இருந்தார்கள்.இன்றைக்கு நிலவரமே மாறியிருக்கின்றது. ரொம்ப சீரியசான புராஜெக்ட்களைத் தவிர மற்ற புராஜெக்ட்களையெல்லாம் கழட்டி விட்டிருக்கின்றார்கள். நம்மாட்களை காணோம்.நிறைய பழைய ஹான்டாக்களும் டொயோடோக்களும் விற்பனைக்கு வந்துள்ளன.பொருளாதார மந்தநிலை நிறுவன வருவாயை பாதித்திருக்கின்றதோ இல்லையோ சும்மாவாச்சும் ரிசசன் என்ற பெயரைச்சொல்லி தலைகளை கொய்யும் வேலையில் பல நிறுவனங்கள் ஆதாயம் தேடத்தொடங்கியுள்ளன. இதற்கிடையே தினசரி வேலை இழப்புகளை சுடச்சுட சொல்ல layoffdaily.com என தளங்கள் வேறு. என்பாடும் கோபால் பாடும் சீக்கிரத்தில் திண்டாட்டம் தான். பரியும் நேகாவும் ஹெல்த்கேரில் இருப்பதால் தற்போதைக்கு தப்பித்திருக்கின்றார்கள்.

வெற்றிகரமாக முதலாளித்துவத்தை மண்ணை கவ்வ வைத்த நிதி நிறுவனங்களில் எத்தனை இன்றைக்கு இருக்கும் சிக்கல்களையெல்லாம் தாண்டி தேறுமென தெரியவில்லை. புதிய படைப்புகளை படைத்து முதலாளித்துவத்திற்கு மரியாதை வாங்கி கொடுத்த மைக்ரொசாப்ட், ஆப்பிள்,கூகிள் போன்ற நிறுவனங்கள் கூட இந்த கலகத்தில் தள்ளாடுகின்றன. ஒரேயடியான சோசியலிசமும் அபாயம் தான் என்பார்கள். எனக்கென்னமோ நம்மூர் போல பிஃப்டி, பிஃப்டி பிடித்திருக்கின்றது.பங்குசந்தை விபரீத விளையாட்டில் விளையாடாமல் தேமேவென கொரித்து கொரித்து வங்கியில் சேமிப்புக்கணக்கில் போட்டு வைத்துள்ள பணத்துக்கூட பாதுகாப்பு இல்லையெனில் என் சொல்வது.

வீட்டில் குழாய் உடைந்து போனால் முதலில் தண்ணீரை அடைத்து விட்டு பின்பு பழுதுபார்ப்பார்கள் பிளம்பர்கள். இங்கேயோ பழுதுபார்ப்பதை விட்டு விட்டு டிரில்லியன் கணக்கில் டாலர்களை அச்சடித்துக் கொட்டுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.சீக்கிரத்தில் அது கழுத்து வரைக்கும் வீங்கிவிடும் போலிருக்கின்றது. போகின்ற போக்கில் நான் சொல்லிக் கொண்டே போகின்றேன். களமுனையில் இருப்பவனுக்குத்தான் தெரியும் அதன் மத்தள இடி.

90-களில் மெல்ல மெல்ல எட்டிப்பார்த்த பொருளாதார மந்தநிலை கணிணிப் புரட்சி வந்ததால் காணாமல் போயிற்றென்பார்கள். கணிணி மற்றும் இணையத்தால் இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. கோபால்கள் அங்கும் இங்கும் பறந்தார்கள். அது நம்மை கொஞ்சம் பிசியாக வைத்துக்கொண்டது. இன்றைக்கு உருவாகியிருக்கின்ற மந்த நிலையிலும் மக்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஏதாவதொரு இன்னொரு தொழில் நுட்பப்புரட்சி தேவைப்படுகின்றது. ஆமாம் இன்னொரு இன்னோவேசன் அவசரமாகத் தேவை.

ஜனங்களை சுறுசுறுவென வைத்துக்கொள்ள இப்படி எதாவது வராவிட்டால் அவனவன் அம்புகளை எடுத்துக்கொண்டு பின் சண்டைக்குத்தான் போவான்.உணவுச்சங்கிலி போட்டியில் சமச்சீர்நிலை அடைய மில்லியன் பேரைக் கொல்வான்.பின் சர்வச் சாதாரணமாக அதை மூன்றாம் உலகப்போர் என்பான்.

Source (PKP.blogspot.com)

0 comments: